கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார். அவருக்கு வயது 72. அவரது அரசியல் பயணம் எம்ஜிஆர் காலத்தில் தொடங்கியது.
வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு 1948ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் தேதி தஞ்சை மாவட்டம் ராஜகிரியில் பிறந்தார். சொந்த ஊரில் பள்ளிப்படிப்பை முடித்த அவர், தஞ்சையில் உள்ள மன்னர் சரபோஜி கல்லூரியில் பி.ஏ. படித்தார். கல்லூரி படிப்பை முடித்துவிட்டு கூட்டுறவு சொசைட்டியில் சில ஆண்டுகள் பணி புரிந்தார். பின்னர் எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் அ.தி.மு.க வில் சேர்ந்தார்.
அதனைத் தொடர்ந்து பாபநாசம் ஒன்றிய செயலாளராகவும், மாவட்ட வேளாண் விற்பனை தலைவராகவும் பதவி வகித்தார் அமைச்சர் துரைக்கண்ணு.
2006, 2011, 2016 என மூன்று முறை தொடர்ந்து அதிமுக சார்பில் பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் இவர். 2016ஆம் ஆண்டு, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் தமிழக வேளாண்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
தஞ்சை வடக்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்தார். இவருக்கு பானுமதி என்ற மனைவியும், இரண்டு மகன்கள், நான்கு மகள்களும் உள்ளனர். மூத்த மகன் சிவபாண்டியன் வேளாண்மைத் துறையில் பணியாற்றி வருகிறார். மற்றொரு மகன் ஐய்யப்பன் என்கிற சண்முகபிரபு அதிமுக மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையின் செயலாளராக உள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
Comments
Post a Comment