பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் நேற்று முன்தினம் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு தொடங்கியது. இதில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத கர்நாடக அரசு தடை விதித்தது. இதற்கு முஸ்லிம் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் தேர்வு மையங்களை சுற்றி 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மாநிலத்தில் பல்வேறு இடங்களில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை ஆசிரியர்கள் தடுத்து நிறுத்தினர். ஹிஜாப்பை கழற்றிய பிறகே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். சில இடங்களில் அதிருப்தி அடைந்த முஸ்லிம் மாணவிகள் தேர்வை புறக்கணித்து வீடுகளுக்கு திரும்பினர். கர்நாடகா முழுவதும் 8 லட்சத்து 69 ஆயிரத்து 399 மாணவர்கள் தேர்வு எழுத ஹால் டிக்கெட் வழங்கப்பட்டிருந்தது. இதில் 8 லட்சத்து 48 ஆயிரத்து 405 மாணவ-மாணவிகள் மட்டுமே முதல் நாள் தேர்வு எழுதினர். 20 ஆயிரத்து 994 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதவில்லை என தெரியவந்துள்ளது. இதில் முஸ்லிம் மாணவிகள் எத்தனை பேர் தேர்வு எழுதவில்லை என்பது தெரியவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment