ஜம்மு: ஜம்முவில் இன்று காலை வாகன சோதனையின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தப்பி ஓடிய ஓட்டுநரை பாதுகாப்புப் படையினர் தேடி வருகின்றனர். டெல்லியில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ள சூழலில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
இது குறித்து ஜம்முவின் டிஜிபி முகேஷ் சிங் கூறுகையில், "இன்று காலை வழக்கம் போல் ஜம்முவில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தோம். சுமார் 7 மணி அளவில் அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு வாகனம் வந்தது. பொதுவாக அந்த நேரத்தில் அந்தப் பகுதி வழியாக அப்படியான டிரக் ஏதும் வருவதில்லை. சரி வாகனம் அருகே வரவும் சோதனை செய்யலாம் என்றிருந்தோம். அப்போது, திடீரென்று வாகனத்திலிருந்து இறங்கிய ஓட்டுநர் சிறுநீர் கழிக்கச் செல்வது போல் மறைவான பகுதிக்குச் சென்றார். ஆனால் அவர் நீண்ட நேரம் திரும்பவில்லை. இதனால் சந்தேகத்தின் பேரில் நாங்கள் அந்த வாகனத்தை நெருங்கினோம். அப்போது வாகனத்திலிருந்து எங்களை நோக்கி துப்பாக்கி குண்டுகள் வந்தன. உடனே நாங்கள் சுதாரித்துக் கொண்டு பதில் தாக்குதல் நடத்தினோம். இதில் ட்ரக்கில் இருந்த மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தப்பி ஓடிய ஓட்டுநரை தேடி வருகிறோம். வாகனத்தில் இருந்த வெடிப் பொருட்கள் வெடித்ததால் வாகனம் தீ பிடித்தது. தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment