
வயநாட்டில் நூற்றுக்கணக்கான உயிர்களை பலிகொண்ட வரலாறு காணாத நிலச்சரிவுக்கு வைக்கப்படும் முதன்மையான காரணம் என்பது காலநிலை மாற்றமாக இருந்தாலும், அந்த மாற்றம் நிகழக் காரணமான வேர்களை அறிந்து, அதற்கேற்ப அரசு கொள்கைகளை மாற்றியமைக்க வேண்டிய தருணம் உணர்த்தப்பட்டுள்ளது எனக் கூறுகின்றனர் சூழலியல் ஆர்வலர்கள். காலநிலை மாற்றம், வலுவிழந்த நிலப்பரப்பு, அருகி வரும் வனப்பரப்பு ஆகியன வயநாடு வரலாறு காணாத நிலச்சரிவுக்கு சரியான காரணமாக அமைந்துள்ளன என்று சொன்னால் அது மிகையல்ல. இதனை உறுதிப்படுத்த நிறைய தரவுகளும் இருக்கின்றன.
எச்சரித்த இஸ்ரோ ஆய்வறிக்கை: இஸ்ரோ கடந்த ஆண்டு வெளியிட்ட நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகள் அடங்கிய வரைபடத்தில், “இந்தியாவில் உள்ள 30 நிலச்சரிவு அபாயம் கொண்ட பகுதிகளில் 10 கேரளாவில் உள்ளன. 30 இடங்களில் கேரளாவின் வயநாடு 13-வது இடத்தில் இருக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் கொங்கன் மலைப் பகுதியில் 0.09 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவு, அதாவது தமிழகம், கேரள, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளடக்கிய பகுதிகள் நிலச்சரிவால் அதிகம் பாதிக்கப்படக் கூடியவை. குறிப்பாகக் கேரளாவில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நிலவும் மக்கள் தொகை அடர்த்தியால் நிலச்சரிவுக்கு அதிக அபாயம் உள்ள பகுதியாக அதை மாற்றுகிறது” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment