முதல்வர் பதவியில் இருந்து விலக தயார்: மருத்துவர்களுக்காக 2 மணி நேரம் காத்திருந்த பிறகு மம்தா பானர்ஜி அறிவிப்பு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் போராட்டம் நடத்தி வரும் பயிற்சி மருத்துவர்களை பேச்சுவார்த்தைக்கு அரசு அழைத்த நிலையில், நேரடி ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்யப்படாததால் பேச்சுவார்த்தையை புறக்கணித்தனர். இதனால், முதல்வர் மம்தா பானர்ஜி 2 மணி நேரம் காத்திருந்தார். மக்கள் நலனுக்காக முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயார் என்று அவர் கூறியுள்ளார்.
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பெண் பயிற்சிமருத்துவர் கடந்த மாதம் பாலியல்வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் நீதி கிடைக்க வலியுறுத்தியும், சில அதிகாரிகளை பணிநீக்கம்செய்ய வலியுறுத்தியும் பயிற்சி மருத்துவர்கள் தொடர்ந்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பணிக்கு திரும்புமாறு உச்ச நீதிமன்றம் கெடு விதித்த பிறகும், பயிற்சி மருத்துவர்களின் போராட்டம் 34-வது நாளாக நேற்றும் நீடித்தது. இதையடுத்து, கடந்த 11-ம் தேதி மாலை 6 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் களுக்கு மாநில தலைமைச் செயலர் மனோஜ் பந்த் அழைப்பு விடுத்தார். இதில் 15 பேர் வரை பங்கேற்கலாம் என்று கூறியிருந்தார். ஆனால், ‘‘30 பிரதிநிதிகளுக்கு அனுமதி வேண்டும். முதல்வர் மம்தா முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும். இந்த நிகழ்வை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும்’’ என மருத்துவர்கள் நிபந்தனை விதித்தனர். இதை அரசு ஏற்காததால் அன்றைய தினம் பேச்சுவார்த்தை நடக்கவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment